|
நியூஜெர்சி தமிழ்ச் சங்க
தைப் பொங்கல் திருநாள்!
Want to send your
articles email
admin@tamilpakkam.com
சென்ற சனிக்கிழமை மாலை (ஜனவரி 30
ஆம் தேதி ) நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் தைப்
பொங்கல் திருவிழா, பிரிட்ஜ்வாட்டரில் உள்ள பாலாஜி
கோவில் அரங்கத்தில் இனிதே நடந்தேறியது. முறைப்படி
தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாலை ஆரம்பித்த விழாவில்
நியூஜெர்சி தமிழ்ச் சங்க தலைவர் திருமதி ரேணுகா
குமாரசாமி அவர்கள் தலைமையேற்று வரவேற்புரை
நிகழ்த்தினர். பக்திப்பாடல்களுடனும்,
பரதநாட்டியத்துடனும் ஆரம்பித்த விழா பல்வேறு கலை
நிகழ்ச்சிகளுடன் கலைகட்டியது. கடும் குளிரையும்
பொருட்படுத்தாமல் அரங்கம் நிறைய அனைத்து தரப்பு
தமிழ் மக்களும் வந்திருந்தது பொங்கலின் பெருமையை
உணர்த்தியது. `பொங்கல் எமக்கு' (what Pongal means
to me) - எனும் சொந்த அனுபவங்கள் பற்றிய கட்டுரைப்
போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி
பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன.
முதல் பரிசினை பிரியன் செல்வகுமாரும், இரண்டாம்
பரிசினை செல்லம் கல்யாணசுந்தரம், மூன்றாம் பரிசினை
அஞ்சனா பிரகாசமும் பெற்றனர். விழாவிற்கு அமைப்பு
தலைவர் மருத்துவ முனைவர் சுந்தரம், முன்னாள்
தலைவர்கள் முனைவர் குமாரசாமி, திருமதி மீனா
இராவணன், திரு. முத்து குமார் ஆகியோர் வந்திருந்து
பொங்கல் விழாவினை சிறப்புப் படுத்தினர். விழாவின்
பார்வையாளர்களில் ஒருவராக கின்னஸ் புகழ் நீச்சல்
வீரர் குற்றாலீசுவரன் அமர்ந்திருந்தது
பெரும்பாலோருக்கு தெரிந்திருக்காது.

பொங்கல் அன்றும் இன்றும் சிறு நாடகம் பொங்கல்
விழாவில் நாம் காணும் மாற்றங்களை உணர்த்தியது. நம்
கலாச்சாரத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தை
உணர்த்தியது. அமெரிக்காவைவிட தமிழகத்தில் அல்லவா
கலாச்சாரம் மறைந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளின்
நிகழ்ச்சிகளாக வந்து கொண்டிருந்த விழாவில் திடீரென
பெரியவர்கள் குழு (adults) தமிழத்தின் பாரம்பரிய
உடையில் வந்து தீரன் சின்னமலையின் வீரம் பற்றிய
நாட்டுப்புறப் பாடலுக்கு ஆடியது அனைவரையும்
திகைப்பில் ஆழ்த்தியது.

விழா நிகழ்ச்சிகளை செல்விகள் அகிலா ஆறுமுகம் , ஜெயா
சின்னையா சிறப்புடன் தொகுத்து வழங்கினர்.
தமிழிலும் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும். விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர்
திரு கல்யாண், பொருளாளர்கள் திரு குமார் கவுண்டர்,
முனைவர் முத்து தங்கம், உறுப்பினர்கள் திரு
செந்தில்நாதன் , திருமதி அமுதா ஆறுமுகம் , திருமதி
உஷா கிருஷ்ணகுமார், திருமதி இந்திரா சின்னைய்யா
ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர். |

ஹைத்தியில் நடந்த பெரும் துயரத்திற்கு நிதி
திரட்ட இளையோர் குழுவைச் சேர்ந்த மனோஜ் குமார், மதன் குமார்,
ஜெயா சின்னையா, நிவேதா பொன்முடி, சஞ்சனா
கிருஷ்ணகுமார் ஆகியோர் உணவு, நீர், குளிர்பானம் விற்றனர்.
அவர்கள் ஈட்டும் தொகைக்கு ஈடாக வழங்கப்போவதாக தலைவர்
அவர்கள் அறிவித்தார். விழாவின் இறுதியில் நன்றியுரையை
துணைத் தலைவர் திரு கல்யாண் அவர்கள் சிறப்புடன் செய்தார்.
ஜனகனமன ... பாடலை செல்வி அமிர்தா இசைத்தபோது அனைவரும்
அமைதியாக எழுந்து நின்றனர்.
தொகுப்பு
ப. மு. தங்கம்